சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வரும் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது, அதை வீடியோவாக எடுத்து வைக்கப்பட்டு பெண்கள் மிரட்டப்படுவது, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு அங்கே பணிபுரியும் பேராசிரியர்களே பாலியல் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட அம்சங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் குலசாமி.
ஆட்டோ டிரைவர் விமல் தான் வசிக்கும் பகுதியில் எந்த ஒரு பெண்ணிற்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நடந்தாலும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களை மிக கொடூரமாக கொலை செய்கிறார். ஆனால் தடயங்கள் இல்லாததால் போலீஸாரால் அவரை நெருங்க முடியவில்லை.
இந்த நிலையில் கல்லூரி படிக்கும் பெண் ஒருவர் கல்லூரி பேராசிரியை வினோதினி மூலமாக இதுபோன்று பணக்கார முதலைகளுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுகிறார். இந்த உண்மைகளை தனது தோழிக்கு வீடியோக்களாக அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த தகவலை அறிந்த ரவுடி கும்பல் அந்த பெண்ணை கொலை செய்ய துரத்துகிறது. அவர்களிடமிருந்து அந்தப்பெண்ணை காப்பாற்றும் விமல் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குகிறார்.
ஆட்டோ டிரைவரான விமலுக்கு ஏன் இவ்வளவு கோபம் ? இதன் பின்னணியில் என்ன நடந்தது ? அவரால் இந்த இளம்பெண்ணை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
வழக்கம்போல் விமல் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார். முதல் முறையாக ஒரு ஆக்சன் படத்தில் விமல் நடித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
கதாநாயகியாக வரும் தான்யா ஹோப், தங்கையாக வரும் கீர்த்தனா, கல்லூரி பேராசிரியராக வரும் வினோதினி, போலீஸ் அதிகாரியாக வரும் போஸ் வெங்கட், என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண்களை தொட்டாலோ அல்லது அவர்களின் அனுமதி இன்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தண்டனை மிகக் கொடூரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சமரசம் இல்லாமல் தீர்ப்பை தீர்க்கமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவண சக்தி.
படத்தின் திரைக்கதையில் இயக்குனராக சரவண சக்தி வென்றிருக்கிறார். பல படங்களில் பார்த்த ஒரு கதையையே கொடுத்து வழக்கமான படம் தானா என்று கடந்து செல்லும் படியாக நம்மையும் கடந்து செல்ல வைத்து விட்டார் இயக்குனர்.