Damakka.in

Website for Tamil Cinema

இராக்கதன் ; விமர்சனம்

மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை தோலுரிக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் இந்த ராக்கதன். கிராமத்து இளைஞன் விக்னேஷ்.. அம்மா மற்றும் தங்கை என அளவான குடும்பம் இவருடையது. மாடலிங் துறையில் பெரிதாக சாதிக்க நினைத்து நகரத்திற்கு செல்ல விரும்புகிறார். ஆனால் சூழ்நிலை காரணமாக தனது ஆசைகளை பூட்டி வைத்து கிடைக்கும் வேலைக்கு செல்கிறார்.

இவரின் நெருங்கிய நண்பர்கள் தான் காயத்ரி மற்றும் தினேஷ் கலைச்செல்வன். ஒரு கட்டத்தில் காயத்ரிக்கும் விக்னேஷுக்கும் காதல் மலர்கிறது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக நகரத்தில் ரியாஸ்கான் நடத்தும் மாடலிங் நிறுவனத்தில் இருந்து விக்னேஷுக்கு அழைப்பு வருகிறது.

அவரும் ஆவலுடன் கிளம்பி செல்கிறார். ஆனால் சில நாட்கள் கழிந்த நிலையில் ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாயகன் விக்னேஷ் மட்டுமல்ல. அவரை வேலைக்காக அழைத்த ரியாஸ் கானும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

இருவரையும் கொன்றது யார் ? அதற்கான பின்னணி என்ன என்பதை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி வம்சி கிருஷ்ணா களம் இறங்குகிறார். குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா ? இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் பாஸ்கருக்கு இது முதல்படம் போல இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார்.. படத்தில் பார்ப்பதற்கு நிஜ மாடல் போல இருக்கிறார். காதல்,ஆக்ஷன் , செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா நேர்மையான காவல்துறை அதிகாரியாக காக்கி சட்டை போடாமல் கம்பீரமாக வலம் வருகிறார். இதுவரை வில்லனாக பார்த்த நமக்கு ஒரு பெண் குழந்தையின் அப்பாவாக நடித்து மனதில் இடம்பிடிக்கிறார்.

நாயகனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் இறுதிக்காட்சியில் இவருடைய நடிப்பு படம் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடும்.

மாடலிங் நிறுவனம் நடத்துபவராக நடித்திருக்கும் ரியாஸ் கான், மாறுபட்ட வேடத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். நிழல்கள் ரவி, சாம்ஸ், சஞ்சனா சிங் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதைக்களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார். மேலும் தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களின் துன்பங்களை மட்டுமே படமாக்கி வரும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு ஆண் தனது குடும்பத்திற்காகவும், தனது கனவிற்காகவும் எதிர்கொள்ளும் துன்பங்களை அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *