வட சென்னையை மையமாக வைத்து வெளி வந்திருக்கும் இன்னொரு படம். இது வழக்கமான இன்னொரு படமா ? இல்லை வரவேற்கக் கூடிய படமா ? பார்க்கலாம்.
வடசென்னை பகுதியில் அனாதை ஆசிரமத்தில் இருந்து மைக்கேல் தங்கதுரை, கேபிரில்லா செல்லஸ், அப்சல் ஹமீது, வினுஷா தேவி என நால்வரையும் சிறுவயதிலிருந்து எடுத்து வளர்க்கிறார் வடிவுக்கரசி. இந்த நால்வரும் வளர்ந்து இவர்களுக்குள்ளேயே இரண்டு ஜோடிகளாகவும் மாறுகின்றனர்.
ஒரு நாள் இரவு படம் பார்த்துவிட்டு இந்த ஜோடிகள் ஜாலியாக பேசிக்கொண்டு நடந்து வர, எங்கிருந்தோ வரும் ஒரு துப்பாக்கிக் கொண்டு வினுஷா தேவியின் உடலில் பாய்கிறது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இன்ஸ்பெக்டர் அனுபமா குமார் இந்த வழக்கு குறித்து தீவிரமாக ஆராய்கிறார். வினுஷா தேவியை யார் சுட்டது ? அதற்கு என்ன காரணம் ? அவர் உயிர் பிழைத்தாரா என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
இதனுடன் போலீஸ் அதிகாரியான அனுபமா குமாரின் சோகமான பக்கம், மைக்கேல் தங்கதுரையை பழிவாங்க காத்திருக்கும் ஏரியா தாதா என கிளை கதைகளை இணைத்து எப்படி மெயின் கதையில் ஒன்றிணைக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்..
இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். அதிலும் சீரியல் நடிகைகளான கேப்ரில்லா மற்றும் வினுஷா தேவி இருவரும் சின்னத்திரையில் நடித்து அசத்தியது போலவே வெள்ளித்திரையிலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மற்ற படத்திலிருந்து சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் அனுபமா. வடிவுக்கரசி, தனது அனுபவ நடிப்பைக் காட்சிக்கு காட்சி கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
மேலும், படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை சில கதாபாத்திரங்களும் அதில் நடித்து இருக்கும் இளைஞர்களும் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காசிமேடு பகுதியை கண்முன் நிறுத்துகிறது திவ்யன்க் கேமரா. பால சுப்பிரமணியம் இசையும் பலம். கடற்கரை மக்களின் வாழ்வியலை பின்னணியாக வைத்து அழுத்தமான கதையை யதார்த்தம் மீறாமல் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளார்.
ஆனாலும் தெளிவான ஒரு திரைக்கதையை கொடுக்க சற்று தடுமாறியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் குமார். பெரிதான ஒரு ஈர்ப்பை இப்படம் கொடுக்கவில்லை என்றாலும், காட்சிகளை அழகூற கூறியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்
வட சென்னை என்றால் இப்படித்தான் என்ற நெகடிவ் பிம்பத்தை இப்படத்தில் சற்று உடைத்திருக்கிறார் இயக்குனர். இன்னும் சற்று வலுவாகவே அதை செய்திருக்கலாம்.