பிரபல மாடலின் அழகியான மீனாட்சி சவுத்ரி அவர் தங்கியிருக்கும் வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அப்போதுதான் போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர் தனது சீனியர் ஆசிரியரும் மற்றும் உயர் போலீஸ் அதிகாரியுமான விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார்.
ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி மறுத்தாலும் பின்னர் இந்த வழக்கில் ஈடுபாடு செலுத்தி இருவரும் சேர்ந்து இந்த கொலைக்கான பின்னணியை துப்பு துலக்க துவங்குகின்றனர். இவர்களது சந்தேகம் மீனாட்சி சவுத்ரியுடன் நெருங்கி பழகிய நண்பரான இசைப்பிரியர் சித்தார்த்தா சங்கர், மாடலின் ஏஜென்ட் முரளி சர்மா, மாடல் போட்டோகிராபர் அர்ஜுன் சிதம்பரம், மீனாட்சியின் மேனேஜர் என சொல்லிக்கொள்ளும் கிஷோர் குமார் ஆகியோர் ஒவ்வொருவர் மீதும் விழுகிறது.
இறுதியில் மீனாட்சியை கொலை செய்தது யார் ? அதற்கான பின்னணி என்ன என்பதை எதிர்பாராத ஒரு கோணத்தில் இருந்து கண்டுபிடிக்கிறார் விஜய் ஆண்டனி. யார் அந்த நபர் என்பது அதிர்ச்சி தரும் கிளைமாக்ஸ். இதில் விஜய் ஆண்டனியின் சொந்த சோக கதையும் கொஞ்சம் இணைத்து சென்டிமென்டாக அதே சமயம் ஸ்டைலிசாக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி குமார்.
சால்ட் பெப்பர் தலைமுடியுடன், நடுத்தர வயது புலனாய்வு அதிகாரியாக விஜய் ஆண்டனி. ஆர்ப்பாட்டம் இல்லாத உடல்மொழி, நிதானமான நடை, மென்மையான வசன உச்சரிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். மகளின் நிலை கண்டு வேதனைப்படும் காட்சிகளில் தந்தையாக மாறி பரிதாபம் அள்ளுகிறார்.
இளம் போலீஸ் அதிகாரியாக விறைப்பும் மிடுக்குமாக வருகிறார் ரித்திகா சிங் முதல் வழக்கை வெற்றிகரமாக விசாரித்து முடிக்க வேண்டும் என்ற மும்முரம், உயர் அதிகாரியின் திமிர் பேச்சை கேட்டு சகித்துக் கொண்டு, பொறுமையாக பதிலளித்து வழக்கி;ற்காக எடுக்கும் முயற்சிகள் என்று படம் முழுவதும் அன்டர்பிலே செய்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனாலும் லைலாவாக வந்த மீனாட்சி சவுத்ரி தான் தன் நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஒரு மாடல் அழகி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார் மீனாட்சி.
மாடலிங் துறையின் தலைமை அதிகாரி ராதிகா சரத்குமார், நண்பராக, அப்பாவி முகப்பாவத்துடன், உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத முகபாவத்துடன், வியப்பில் ஆழத்தும் புது தோற்றத்தில் சித்தார்த்தா சங்கர், மாடலிங் ஏஜென்டாக முரளி சர்மா, போலீஸ் உயர் அதிகாரியாக தன் பேச்சால் எரிச்சலைடயச் செய்யும் ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம்,கிஷோர் சர்மா ஆகியோர் அவர்களுக்கேற்ற கதாபாத்திரத்தை உணர்ந்து படத்தின் விறுவிறுப்பிற்கு துணை புரிந்துள்ளனர்
இன்றைய டிரெண்டிங்கான ட்யூனில் நம் மனதை இசையாலும் மற்றும் காட்சிக் கோணங்களில் பின்னணி இசையாலும் கட்டிப் போட்ட ஸ்டைலிஷ் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் கோணங்களும், ஒளி அமைப்பும் ஒரு ஹாலிவுட் படத்தின் தரத்தில் இருப்பது பாராட்டத்தக்கது.
கொலை செய்யப்பட்ட பெண்ணே பார்வையாளர்களிடம் பேசுவதைப் போல ஒரு யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குநர். ஒரு மாடல் அழகி கொலையில் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிக்கும் திறமைமிக்க போலீஸ் கதைக்களத்தில் மர்மத்தை தக்கவைத்து படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளார் இயக்குனர் பாலாஜி கே.குமார் நல்ல விஷுவல்ஸுடன் கூடிய கொலை த்ரில்லர் படம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற படம் கொலை.