மறைந்த மூத்த நடிகர் முத்துராமனின் பேரனாக, நவரச நாயகன் கார்த்திக்கின் மகனாக, மோதிரக்கையால் குட்டுப்பட்டதுபோல மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ படம் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் கவுதம் கார்த்திக். இந்த பத்து வருடங்களில் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டியுள்ள கவுதம் கார்த்திக் செலக்டிவான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் முத்தையா டைரக்ஷனில் 2019ல் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்தபோது இவருக்கும் அதில் கதாநாயகியாக நடித்த நடிகை மஞ்சிமா மோகனுக்கும் நல்ல நட்பு உருவாகி, பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது.
தற்போது இவர்கள் இருவரும் தங்களது திருமணம் வரும் நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்பதை அதிகாரபூர்வமாக வெளியுலகிற்கு அறிவித்துள்ளார்கள். கவுதம் கார்த்திக் திரையுலக குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் தங்களது திருமணம் மிகவும் எளிமையாக நடக்க உள்ளது என்றும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகை மஞ்சிமா மோகன் 2015ல் மலையாளத்தில் நிவினபாலி கதாநாயகனாக நடித்த ஒரு வடக்கன் செல்பி என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்கு முன்பே சுமார் எட்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அவர் தொடர்ந்து தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அச்சமென்பது மடமையடா என்கிற படத்தில் நடித்தார்.
அதைத்தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்ய இருப்பதால் படங்களில் நடிப்பதை தற்காலிகமாக குறைத்துக் கொண்டுள்ளார் மஞ்சிமா மோகன்.
இவர்களது காதல் பயணத்தில் முதன் முதலில் காதலை தெரிவித்தது கௌதம் கார்த்திக் தான். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் மகிழ்ச்சியுடன் பச்சைக்கொடி காட்ட, இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது.
கவுதம் கார்த்திக் நடிப்பில் தற்போது 1947 மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்துவரும் 10 தல ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன