Damakka.in

Website for Tamil Cinema

“சந்தானத்தின் தீவிர ரசிகனாகவே மாறி ‘கிக்’ படத்தை இயக்கியுள்ளேன்” ; இயக்குநர் பிரசாந்த் ராஜ் உற்சாகம்*

 

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்

அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

வரும் செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன்ராஜ் பேசும்போது, “2008ல் தயாரிப்பு நிறுவனம் துவங்கியபோது தமிழில் எப்போது படம் தயாரிப்போம் என்பது ஒரு கனவாகவே இருந்தது. சரியான கதைக்காகவும் சரியான நேரத்திற்காகவும் காத்திருந்தேன். அது கிக் படம் மூலமாக தேடி வந்துள்ளது. சந்தானம் இந்த படத்திற்குள் வந்ததும் ஒரு மேஜிக் ஆரம்பமானது. தமிழ் படங்கள் என்றாலே எனக்கு கிரேஸ் அதிகம். சிறுவயதில் நான் முதலில் பார்த்த படம் தளபதி தான். ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ் என எல்லா படங்களையும் முதல் தான் முதல் காட்சி பார்த்து விடுவேன். இந்த படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி மூன்று மாதத்தில் முடித்தோம். ஒரு நாள் 300 கலைஞர்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தியபோது சந்தானத்திற்கு காய்ச்சல் என மருத்துவமனைக்கு சென்றார். இதனை கேள்விப்பட்டு படப்பிடிப்பை ரத்து செய்ய சொன்னேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சந்தானம் போன் செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நான் தற்போது படப்பிடிப்பிற்கு சென்று கொண்டிருக்கிறேன் ரத்து செய்ய வேண்டாம் என கூறினார். அந்த அளவிற்கு இதில் அவர் முழு ஈடுபாடு காட்டினார்” என்றார்.

நடிகர் முத்துக்காளை பேசும்போது, “சந்தானத்துடன் நான் இணைந்து நடித்த நான்காவது படம் இது. சிவாஜி படத்தில் நடித்தபோது கிடைத்த மரியாதையை சந்தோஷத்தை இதில் மீண்டும் உணர்ந்தேன்” என்றார்.

நகைச்சுவை நடிகர் கிங்காங் பேசும்போது, “நடிகர் சந்தானத்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என அழைத்து கிட்டத்தட்ட எனக்கு 175 மிஸ்டு கால்கள் வந்தன. இதுவரை 8000 மேடைகளை பார்த்து விட்டேன். இன்று இந்த மேடையில் தான் சந்தோசமாக உணர்கிறேன். ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்தில் எல்லாம் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் தமிழில் தான் வருவதில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “சந்தானம் சும்மா ஒரு ஹீரோவாக உருவாகவில்லை. உடலை வருத்திக்கொண்டு, அதற்காக தன்னை தயார்படுத்தி கொண்டவர். நாங்கள் எல்லாம் படப்பிடிப்பில் விதவிதமாக சாப்பிடும்போது தயிர் சாதம் மட்டும்தான் சாப்பிடுவார் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை சொல்லி அடித்தார். அதேபோல இந்த கிக் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.. நாளுக்கு நாள் சந்தானத்திற்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது” என்று கூறினார்

நாயகி தான்யா ஹோப் பேசும்போது, “தமிழ் சினிமாவில் எனது முதல் காமெடி படமாக இது உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை படம் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே இருப்பார்கள்.. காமெடி பண்ண வேண்டும் என ஆசை இருக்கிறது.. காமெடியாக நடிப்பது கஷ்டமாகவும் இருக்கு.. அந்த வகையில் சந்தானம் ஒரு காமெடி கிங்” என்று கூறினார்.

நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “ஒருமுறை முடிவை எடுத்து விட்டால் அதிலிருந்து மாறக்கூடாது என கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல தான் எடுத்த முடிவில் மாறாமல் இருக்கிறார் சந்தானம். சிலபேர் எப்போதும் தோற்கவே கூடாது என மக்கள் நினைப்பார்கள். அப்படி ஒருவர் தான் சந்தானம். டிடி ரிட்டன்ஸ் கொடுத்த வெற்றி இங்கே அனைவரின் முகத்திலும் தெரிகிறது. இயக்குநர் பிரசாந்த் ராஜ் நகைச்சுவை காட்சிகளை பிரமாதமாக வடிவமைக்கிறார். இந்த படத்தில் ஆணழகன் போல சந்தானம் காட்சியளிக்கிறார். ஹிந்தி படம் போல ஒரு தமிழ் படமாக இந்த கிக் உருவாகி இருக்கிறது. சந்தானம் தான் மட்டும் ஸ்கோர் செய்ய வேண்டும் என விரும்பாமல் தன்னை சுற்றியுள்ள அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பவர்” என்றார்.

நடிகை ராகினி திவிவேதி பேசும்போது, “இந்த படத்தில் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். தமிழில் இப்படி ஒரு படம் பண்ணுவேன் என நான் நினைக்கவே இல்லை. இவ்வளவு நட்சத்திர பட்டாளத்துடன் எனக்கும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சந்தானம் பாடல், சண்டை, காமெடி என எல்லாவற்றிலும் அசத்தியுள்ளார். கன்னட திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறேன் உங்கள் ஆதரவு தேவை” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் ராஜ் பேசும்போது, “2009ல் நான் முதலில் இயக்கிய ‘லவ் குரு’ படத்தின் இசைப் பணிகளுக்காக ஏ.ஆர் ரகுமான் ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்து செல்லும் தமிழ் பிரபலங்களை பார்த்தேன். அப்போதிருந்தே தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு எப்போது கிடைக்கும் என காத்திருக்க ஆரம்பித்தேன். கோவிட் காலகட்டத்தில் கிடைத்த அந்த ரெண்டு வருடத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கிரிப்ட் தயார் செய்து அதில் சந்தானம் தான் நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அவரை சந்தித்து பேச சில முறை முயற்சித்தும் சரியாக அமையாததால் அதிரடியாக பாண்டிச்சேரிக்கு சென்று திடீரென அவரை சந்தித்து கதையை கூறி சம்மதம் பெற்றேன்.

பாங்காங்கில் தொடர்ந்து ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றது இடையில் நடைபெற்ற தனது அப்பாவின் சடங்குகளுக்கு கூட சென்னை வராமல் அங்கேயே அவற்றை செய்து முடித்தார் சந்தானம். படம் துவங்குவதற்கு முன்பே அவர் போட்ட கண்டிஷன்களில் ஒன்று இரவு நேர படப்பிடிப்பு வேண்டாம் என்பது தான். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய முதல் நான்கு நாட்கள் இரவு நேரத்தில் அதுவும் சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட்டன.

படத்தில் சந்தானம் செய்யும் காமெடிகளுக்கு சக நடிகர்கள் காட்டும் உணர்வுகளை மேட்ச் பண்ணுவது தான் கஷ்டம். ஆனாலும் நாயகி தான்யா அதை மிகச்சரியாக செய்து விட்டார். இந்த படத்தில் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை நடிக்க வைக்க முடிவு செய்த போது அவரை நம்மால் கையாள முடியுமா என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் இந்த படத்தில் அவர் டான்ஸ், ஃபைட் எல்லாமே பண்ணி இருக்கிறார்.

மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகராக தம்பி ராமையா நடித்துள்ளார். அதனால் அவர் நடிப்பு, டான்ஸ் என இரண்டையுமே செய்தாக வேண்டும். அற்புதமாக அதை பேலன்ஸ் செய்துள்ளார். நடிகர் செந்தில் இந்த படத்தில் கேசியோ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிளாமரான 50 பெண்கள் சுற்றி இருக்கும் விதமாக அவரது காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு பெரிய வில்லன் வேண்டும், அதே சமயம் காமெடியும் இருக்க வேண்டும் என நினைத்தபோது மன்சூர் அலிகான் தவிர யாரையும் யோசிக்க முடியவில்லை. பல நேரங்களில் சந்தானத்தின் காட்சிகளை படமாக்கும்போது கட் சொல்ல மறந்து விடுவேன்.. அந்த அளவிற்கு சந்தானத்தின் ரசிகன் நான்.. ஒரு தீவிர ரசிகனுக்கு அவரது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி பண்ணுவார்களோ அதே போலத்தான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். பொழுதுபோக்கு தவிர வேறு எதையும் இதில் யோசிக்கவே இல்லை.

இந்த படத்தில் பிளாக் பஸ்டர் என்கிற ஒரு இனிப்பு வகையை உள்ளே அறிமுகப்படுத்தி உள்ளோம். அது எதற்காக என்கிற ஆச்சர்யம் படம் பார்க்கும்போது உங்களுக்கு விலகும். சொல்லப்போனால் ‘பிளாக் பஸ்டர்’ என்கிற டைட்டிலைத்தான் முதலில் இந்த படத்திற்கு வைக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் அந்த டைட்டில் எங்களுக்கு கிடைக்காததால் அனைவருக்குமே நன்கு தெரிந்த ‘கிக்’ என்கிற டைட்டிலை வைத்தோம் என்று கூறினார்.

நாயகன் சந்தானம் பேசும்போது, “தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக பாங்காங்கில் இந்த படத்தை நடத்தி முடித்தனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற, வெற்றிக்கு உத்தரவாதம் தருகின்ற கான்செப்ட்டில் தான் இந்த படம் உருவாகியுள்ளது.

பல ஹீரோக்களின் படங்களில் நான் நகைச்சுவை நடிகராக இருந்து கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறேன். அப்படி இந்த படத்தில் தம்பி ராமையா அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பான நிஜாம் பாக்கு விளம்பரத்தில் வருவது போல காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்.

மன்சூர் அலிகானை ஒரு குழந்தை என்று சொல்லலாம். ஹாலிவுட் படத்தில் ஒரு கிங்காங்கிடம் இளம்பெண் மாட்டிக்கொண்டது போல, இந்தப் படத்தில் மன்சூர் அலிகானிடம் நடிகர் கிங்காங் மாட்டிக்கொண்டார். அரண்மனை படத்திற்கு பிறகு இதில் கோவை சரளாவுடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எங்களுக்கான வசனங்கள் ஒர்க் அவுட் ஆனது போல இதிலும் வசனங்கள் இருக்கின்றன.

கிட்டத்தட்ட 500 பெண் நடன கலைஞர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் செந்தில் இத்தனை வருடங்களில் எனக்கு இப்போதுதான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள் என ஆச்சரியப்பட்டு பாராட்டியதுடன் படப்பிடிப்பில் இருந்தே நடிகர் கவுண்டமணிக்கு போன் செய்து அந்த தகவலை கூறி மகிழ்ந்தார்.

கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். பாங்காங்கில் சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது டேவிட் கேஸ்ட்டிலோ மாஸ்டர் முதல்நாளே பக்காவாக ரிகர்சல் பார்த்துவிட்டு தான் படமாக்கினார்.

பாங்காங் போனாலும் எல்லோரும் ஏகபத்தினி விரதன்களாக இருந்ததால் எங்கேயும் ஊர் சுற்றவில்லை. டிடி ரிட்டன்ஸ் படத்துடன் இதை ஒப்பிட வேண்டாம். இந்த கிக் வேற மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார் சந்தானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *